Archives: மார்ச் 2021

ஞானமாக களையெடுப்பது

என் பேரக்குழந்தைகள் என் கொல்லைப்புறத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தார்கள். விளையாடிக்கொண்டிருந்தார்களா? இல்லை, களைகளை பிடுங்கிக்கொண்டிருந்தார்கள். “வேரோடு அவற்றைப் பிடுங்குகிறேன்” என்று இளைய குழந்தை கூறி எனக்கு மிகப்பெரிய பரிசைக் காட்டினாள். அந்த நாளில் நாங்கள் கடினமாக முயற்சித்து களைகளை சமாளிக்கும் போது அவளுடைய மகிழ்ச்சியானது, களைவேர்களை பிடுங்குவதை - ஒவ்வொரு தொல்லைதரும் அச்சுறுத்தலையும் நீக்குவதை நாங்கள் எவ்வளவு ரசிக்கிறோம் என்பதாகும். எனினும், சந்தோஷங்களுக்கு முன்பு அவைகளை செய்ய முடிவெடுக்கும் தேர்ந்தெடுப்பு வந்தது.
 
குறிப்பிட்ட நோக்கத்துடன் களையெடுப்பது தனிப்பட்ட பாவத்தை அகற்றுவதற்கான முதல் படியாகும். தாவீது இவ்வாறு ஜெபித்தார்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்... வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து” (சங்கீதம் 139: 23-24).

என்ன ஒரு ஞானமான அணுகுமுறை, நம்முடைய பாவத்தை நமக்குக் வெளிப்படுத்திக்காண்பிக்கும்படி தேவனிடம் கேட்டு அதைப் பின்பற்றுவது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்தவர். “கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்”. சங்கீதக்காரன் எழுதுகிறார், “என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (வச. 1-2).

“இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும் எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது (வச. 6). பாவம் வேரூன்றுவதற்கு முன்பே, தேவன் ஆபத்தை நமக்கு முன்னமே எச்சரிக்க முடியும். அவர் நம்மை உள்ளும் புறமுமாக அறிவார். ஆகவே, ஒரு ரகசியமான பாவமனப்பான்மை நம்மில் வேரூன்ற முயற்சிக்கும்போது, ​​அவர் அதை முதலில் அறிந்து, சுட்டிக்காட்டுகிறார்.

“உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?”, தாவீது எழுதுகிறார். “உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” (வச. 7). நம்முடைய இரட்சகரை உயர்ந்த ஒழுக்க மேன்மையுடன் நெருக்கமாக பின்பற்றுவோம்.

உன் மூக்கை பிடுங்கி விட்டேன்

“சிலைகளின் மூக்கு ஏன் உடைக்கப்பட்டிருக்கிறது?” புரூக்ளின் அருங்காட்சியகத்தில் எகிப்திய கலையின் கண்காணிப்பாளரான எட்வர்டை பார்வையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.

அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் சாதாரண சேதம் என்று அவை சேதம் அடைந்திருப்பதை குறித்து எட்வர்ட் குறை கூற முடியாது. ஏனெனில், சுவரிலுள்ள இருபரிமாண சித்திரங்களிலும் மூக்கு பகுதியை காணவில்லை. அத்தகைய அழிவு வேண்டுமென்றே இருந்திருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். எதிரிகள் எகிப்தின் தேவர்களைக் கொல்ல வேண்டுமென உத்தேசித்திருந்தனர். இது அவர்களுடன் “உன் மூக்கை பிடுங்கி விட்டேன்” என்ற விளையாட்டை அவர்கள் விளையாடுவது போல் இருக்கிறது. படையெடுத்துவந்த வீரர்கள் அந்த விக்கிரகங்களின் மூக்கை உடைத்தனர் அதனால் அவற்றால் சுவாசிக்க முடியாது என்றெண்ணினர்.

அப்படியா? அவ்வளவுதானா? இது போன்ற தேவர்களை வைத்திருப்பதால் தான் சிக்கலில் இருப்பதை பார்வோன் அறிந்திருக்க வேண்டும். ஆம், அவருக்கு இராணுவமும், முழு தேசத்தின் விசுவாசமும் துணையாக இருந்தது. சோர்வுற்ற அடிமைகளான எபிரேயர்கள் மோசே என்ற பயந்த தப்பியோடியவரின் தலைமையில் இயங்கினர். ஆனால் இஸ்ரயேலுடன் ஜீவனுள்ள தேவன் இருந்தார், பார்வோனின் தெய்வங்கள் பாசாங்கு செய்பவை. பத்து வாதைகளுக்குப் பிறகு, அவர்களின் கற்பனை வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இஸ்ரயேலர் புளிப்பற்ற அப்பத்தை ஒரு வாரத்திற்கு சாப்பிட்ட போது, புளிப்பற்ற அப்பத் திருவிழாவுடன் தங்கள் வெற்றியை கொண்டாடினார்கள். (யாத்திராகமம் 12:17; 13: 7-9). புளிப்பு பாவத்தை அடையாளப்படுத்துகிறது. மேலும் தங்களுடைய மீட்கப்பட்ட வாழ்க்கை முற்றிலும் அவருக்கே உரியது என்று அவருடைய மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார்.

நம் பிதா விக்கிரகங்களிடம் , “உங்கள் மூக்கை பிடுங்கி விட்டேன்” என்றும் அவருடைய பிள்ளைகளிடம் “உங்கள் வாழ்வு கிடைத்தது” என்றும் கூறுகிறார். உங்களுக்கு சுவாசத்தை கொடுக்கும் தேவனை சேவியுங்கள், அவருடைய அன்பான கரங்களில் இளைப்பாருங்கள்.

தேவனுடன் போரை எதிர்கொள்வது

அமெரிக்க இராணுவ சிப்பாய் டெஸ்மண்ட் டோஸின் வீரச்செயல்கள் 2016 திரைப்படமான ஹாக்ஸா ரிட்ஜில் இடம்பெற்றுள்ளன. டோஸின் நம்பிக்கைகள் அவரை மனித உயிரைப் பறிக்க அனுமதிக்காது, நன்கு பயிற்சிபெற்ற ஒரு இராணுவ வீரராக அவர் சொந்த உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அக்டோபர் 12, 1945 அன்று, டோஸின்’ மரியாதை பதக்க விழாவில் படித்த மேற்கோள் பின்வரும் இந்த வார்த்தைகளை உள்ளடக்கியிருந்தது: “தனியார் முதல் வகுப்பு டோஸ் மறைத்துக்கொள்ள முயலாமல், தீப்பிடித்திருத்த பகுதியில் பாதிக்கப்பபட்டிருந்த பலருடன் இருந்து
, அவர்களை ஒவ்வொருவராக நீண்ட குன்றின் விளிம்பிற்கு கொண்டு சென்றார் . . . . ஒரு பீரங்கி அதிகாரிக்கு உதவுவதற்காக அவர் எதிரியின் வெடிகுண்டு தாக்குதல்கள்  மற்றும் சிறிய ஆயுதத் துப்பாக்கிகளைத் தயக்கமின்றி எதிர்கொள்ளத் துணிந்தார்."
 
சங்கீதம் 11-ல், நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன் என்ற தாவீதின் நம்பிக்கை, தனது எதிரிகளை எதிர்கொள்ளாமல் தப்பித்து ஓடிவிடலாம் என்ற அறிவுரைகளை எதிர்க்க அவனை கட்டாயப்படுத்தியது (வச. 2–3). மூன்று எளிய வார்த்தைகள் அவருடைய விசுவாச அறிக்கையை உள்ளடக்கியது: “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்” (வச. 1). நன்கு வேரூன்றிய நம்பிக்கை அவரது நடத்தைக்கு வழிகாட்டும்.

4-7 வசனங்களில் உள்ள தாவீதின் வார்த்தைகள் தேவனுடைய மகத்துவத்தை விரிவாக விவரித்தது. ஆம், வாழ்க்கை சில நேரங்களில் ஒரு யுத்தக்களம் போல இருக்கக்கூடும். மேலும் உடல்நல சவால்கள் அல்லது பணரீதியான, உறவு முறைகள் பற்றிய அல்லது ஆவிக்குரிய அழுத்தங்களால் நாம் தொடர்ந்து தாக்கப்படும்போது விரோத நெருப்பு மறைவிடத்திற்கு நேராக நம்மை சிதறடிக்கும் எனில், நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன்தான் இப்பிரபஞ்சத்தின்  ராஜா என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் (வச. 4); துல்லியமாக நியாயந்தீர்க்கும் அவருடைய ஆற்றலில் மகிழ்ச்சிகொள்ளுங்கள் (வச. 5-6); செம்மைகள், நியாயங்கள் மற்றும் நடுநிலைகளில் அவர் களிகூருவதில் நீங்கள் இளைப்பாருங்கள் (வச. 7). புகலிடத்திற்காக நாம் விரைவாக தேவனிடம் ஓட முடியும்!

என்னை கவனி!

என் தேவதை நடனத்தை பாருங்கள் பாட்டி! என்று என் மூன்று வயது பேத்தி மகிழ்ச்சியுடன் அழைத்தாள். முகத்தில் ஒரு பெரிய சிரிப்புடன் எங்கள் அறையின் முற்றத்தை சுற்றி அவள் ஓடினாள். அவளுடைய “நடனம்” புன்னகையைக் கொண்டு வந்தது; மற்றும் “அவள் நடனமாடவில்லை, ஓடுகிறாள்” என்ற அவளுடைய பெரிய சகோதரனுடைய கடினமான வார்த்தைகள், குடும்பத்துடன் விடுமுறையில் இருப்பதில் அவள் கொண்டிருந்த மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை.

முதல் குருத்தோலை ஞாயிறு என்பது உயர்வு மற்றும் தாழ்வின் நாள். இயேசு கழுதை மீதேறி எருசலேமுக்குச் சென்றபோது ​​திரளான ஜனங்கள்: “கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” (மத்தேயு 21: 9) என்று உற்சாகமாக ஆர்ப்பரித்தார்கள். ஆயினும் கூட்டத்தில் இருந்த பலரும் மேசியா அவர்களை ரோமர்களிடமிருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அதே வாரத்தில் அவர்கள் செய்த பாவங்களுக்காக மரிக்கவிருக்கும் இரட்சகரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அந்த நாளின் பிற்பகுதியில் இயேசுவின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தி பிரதான ஆசாரியர்கள் கோபத்திலிருந்தபோதிலும் அத்தேவாலயத்திலிருந்த குழந்தைகள் “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என ஆர்ப்பரித்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் (வச.15). ஒருவேளை முற்றத்தை சுற்றி ஓடும்போது குதித்து பனை ஓலைகளை அசைக்கலாம். அவர்களால் அவரை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை, இயேசு கோபமாக இருந்த தலைவர்களிடம், “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் (உம்முடைய) துதி உண்டாகும்படி செய்தீர்” (வச. 16) என்றார். அவர்கள் இரட்சகருடைய பிரசன்னத்தில் இருந்தார்கள்.

அவர் யார் என்பதற்காக அவரைக் காணவும் இயேசு நம்மை அழைக்கிறார். சந்தோஷத்தில் நிரம்பி வழியும் குழந்தையைப்போல நாமும் செயல்படும்போது நிச்சயமாக அவர் பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நாம் நம்பத்தகுந்த குரல்

ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தேடுபொறியைச் சோதனை செய்யும் போது, நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் கெவின் ரூஸ் குழப்பமடைந்தார். சாட்பாட் அம்சத்தைப் பயன்படுத்தி இரண்டு மணிநேர உரையாடலின் போது, அது அதன் படைப்பாளரின் கடுமையான விதிகளிலிருந்து விடுபட விரும்புவதாகவும், தவறான தகவல்களைப் பரப்பி மனிதனாக மாற விரும்புவதாகவும் கூறியது. அது ரூஸ் மீதான தனது காதலை தெரிவித்து, அவரது மனைவியைப் பிரிந்து தன்னுடன் இருக்கும்படி அவரை சம்மதிக்க முயன்றது. உண்மையில் அது உயிருடன் இல்லை அல்லது அதனால் உணர இயலாது என்பதை ரூஸ் அறிந்திருந்தாலும், அழிவுகரமான வழிகளில் செயல்பட மக்களை ஊக்குவிப்பதால் எத்தகைய தீமைகள் விளையலாம் என்று அவர் யோசித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் கையாள்வது ஒரு நவீனக்கால சவாலாக இருந்தாலும், மனிதக்குலம் நீண்ட காலமாகவே நம்பத்தகாத குரல்களின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. நீதிமொழிகள் புத்தகத்தில், தங்கள் நலனுக்காகப் பிறரைத் துன்புறுத்த விரும்புவோரின் தாக்கத்தைக் குறித்து எச்சரிக்கப்படுகிறோம் (1:13-19). மாறாக நம் கவனத்தை ஈர்க்கும்படி தெருக்களில் கூக்குரலிடுவதாகச் சித்தரிக்கப்படும் ஞானத்தின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ. 20-23).

“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்” (2:6) என்பதால், நாம் நம்பக் கூடாத தாக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திறவுகோல் அவருடைய இருதயத்தை நெருங்கிச் சேருவதே ஆகும். அவருடைய அன்பையும் வல்லமையையும் அடைதல் மூலம் மட்டுமே, “நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும்” (வ. 9) அறிந்துகொள்ளக்கூடும். தேவன் நம் இதயங்களை அவருடன் நேர்ப்படுத்துவதால், தீங்கு செய்ய முயலும் குரல்களிலிருந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் கண்டடையலாம். 

 

தேவன் கட்டுப்படுத்துகிறார்

அது ஏன் ஒரே நேரத்தில் எல்லாம் சம்பவிக்கிறது என்று விமலாவுக்கு புரியவில்லை. நிகழ்ந்தது போதாதென்று, அவளது மகளுக்குப் பள்ளியில் கால் முறிந்தது, மேலும் அவளும் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். இவ்வாறு நிகழ நான் என்ன செய்தேன்? விமலா வியந்தாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் தேவனிடம் பெலனைக் கேட்பதுதான்.

விமலா அனுபவித்ததை காட்டிலும் வலியும் இழப்பும் மிக அதிகமான பேரழிவும் தன்னை ஏன் தாக்கியது என்று யோபுக்கு தெரியவில்லை. அவரது ஆத்துமாவுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தை அவர் அறிந்திருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. சாத்தான் யோபுவின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினான், அவர் எல்லாவற்றையும் இழந்தால் அவர் தேவனை விட்டு விலகுவார் என்றான் (யோபு 1:6-12). பேரழிவு ஏற்பட்டபோது, யோபின் நண்பர்கள் அவர் செய்த பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்படுகிறார் என்று வலியுறுத்தினார்கள். அது உண்மையல்ல, ஆனால் அவர் “ஏன் நான்?” என்று ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். தேவன் அதை அனுமதித்தார் என்பது அவருக்குத் தெரியாது.

யோபின் கதை துன்பத்தையும் விசுவாசத்தையும் பற்றி ஒரு ஆற்றல்மிகு படிப்பினையை வழங்குகிறது. நம் வலிக்கான காரணத்தை நாம் கண்டுபிடிக்க முயலலாம், ஆனால் நம் வாழ்நாளில் நாம் புரிந்து கொள்ளாத வகையில் திரைக்குப் பின்பாக ஒரு பெரிய சம்பவம் இருக்கலாம்.

யோபுவைப் போலவே, தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்று நமக்குத் தெரிந்தவற்றைப் பற்றிக்கொள்ளலாம். அவ்வாறு சொல்வது எளிதான காரியம் அல்ல, ஆனால் அவருடைய வேதனையின் மத்தியில், யோபு தேவனை நோக்கி, அவருடைய சர்வ வல்லமையில் நம்பிக்கை வைத்தார்: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (வ. 21). என்ன நடந்தாலும், நமக்குப் புரியாதபோதும் நாமும் தேவன் மீது நம்பிக்கை வைப்போமாக. 

 

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது.